தஞ்சாவூர் மாவட்டம், திருக்கானூர்பட்டி ஊராட்சியில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்த ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருக்கானூர்பட்டி ஊராட்சி பகுதி மக்களிடமிருந்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் அனுமதி வேண்டி மனு அளிக்கப்பட்டிருந்தது. இக்கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு வருவதையும், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் இருபுறமும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு வருவதையும், வாடிவாசல் அமைக்கப்பட உள்ள இடத்தையும், பார்வையாளர்கள் பார்ப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ள இடத்தினையும், கால்நடை துறையின் மூலம் ஜல்லிக்கட்டு காளைகளை பரிசோதனை செய்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இட வசதிகளையும் முழுமையாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார். மேலும், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்களின் விவரங்களையும், அவர்களுக்கு தனியாக டி-சர்ட் வழங்கப்படும் விவரத்தையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டறிந்தார். ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.
இவ்வாய்வின் போது தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் திருமதி. வேலுமணி, தஞ்சாவூர் வட்டாட்சியர் திரு.வெங்கடேஷ்வரன், தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உடன் இருந்தனர்.